(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமையினால் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இப்பிரச்சினையைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்ல நேரிட்டதாகவும் அதற்காக ஒரு வார கால அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 3 வாரங்கள் கடந்தும் இதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும், இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தம் குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.







