NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதான அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில்.

இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படும் மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.அவற்றில் 14 கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் கொழும்பில் தமது மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ளவுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், அதன் மே தின கூட்டம் பி.டி. சிறிசேன மைதானத்திற்கு எதிரே புதிய பிரதீபா மாவத்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், பொரளை கெம்பல் மைதானத்தில் தனது கட்சியின் மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகள் ஊடாக மே தின பேரணியை நடத்தவுள்ளதுடன், கீழ் சத்தம் வீதி பகுதியில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.தேசிய மக்கள் சக்தி கட்சி இவ்வருடம் லிப்டன் சுற்றுவட்டத்தில் தனது மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஹெவ்லொக் வீதியில் இருந்து ஆரம்பிக்கும் கட்சியின் பேரணி தும்முல்லையை கடந்து கன்னங்கர மாவத்தை ஊடாக குறித்த இடத்தை சென்றடையவுள்ளது.கொழும்பில் மே தினக் கொண்டாட்டங்களுடன் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மே தினக் கொண்டாட்டங்களை கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் கம்பஹாவில் நடைபெறவுள்ளது.இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பை சுற்றி நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் 6,000 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.அவசர நிலை ஏற்பட்டால் இராணுவத்தினரை களமிறக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் இடம்பெறவுள்ளது.இதன் பின்னர் இன்று பிற்பகல் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸுக்கு முன்பாக நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி இணைந்து கொள்ள உள்ளார்.இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அழைப்பை ஏற்று கலந்து கொள்கிறார். கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக, கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்கிறார். கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தலவாக்கலையில் நடைபெறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். மத்திய, ஊவா மாகாணங்களில் வாழும் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். கிளிநொச்சி, வன்னி உட்பட வடமாகாணத்தில் வாழ்கின்ற நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தனி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன் என கூறியுள்ளார்.

Share:

Related Articles