NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்..!

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன் என்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான பாராளுமன்ற அதிகாரமும் அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்ததாகவும்
குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் இருந்தது எனவும் கூறியுள்ளார்.

எனவே, இருந்ததை விட மோசமான பாராளுமன்றத்தையா அல்லது சிறந்த பாராளுமன்றத்தையா உருவாக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் 25 பேருக்குக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனவே, ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles