அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதியர்களின் அலட்சியத்தால் தமது குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது.
மிஹிந்தலை – கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், பிரசவத்தின் போது தாதியர்களின் அலட்சியத்தால் தங்களின் குழந்தை தரையில் விழுந்ததாக அவரும் அவரது கணவரும் குற்றஞ்சட்டியுள்ளனர்.
இந்நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதயக் கோளாறு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.