(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த அனுமதியை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மனெல்லா இணங்கியுள்ளார்.
இத்தாலிய தூதுவருக்கும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) நீதியமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே, இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதன் சிரமம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதனை தொடர்ந்து, இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பரஸ்பர நட்புறவை கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நீதியமைச்சர் இத்தாலிய தூதுவருக்கு அறிவித்துள்ளார்.