NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதல் தோல்வியால் காதலியை படுகொலை செய்த காதலன் – மாத்தறையில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாத்தறை – ஊருபொக்க, தொலமுல்ல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

காதல் விவகாரத்தில் மனமுடைந்த காதலன், பாடசாலை ஆசிரியையான காதலியின் கழுத்தை அறுத்து நேற்று (14) கொலை செய்துள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

26 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் பாடசாலை முடிந்ததும், பாடசாலை அருகே உள்ள வீட்டிற்கு ஆசிரியர் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, யாருமற்ற பகுதியில் துரத்திச் சென்ற காதலன் கத்தியால் குத்தி பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பாடசாலை ஆசிரியை பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே குறித்த இளைஞனுடன் பழகியதாகவும் அந்த இளைஞன் அவரது கல்விக்கான பணத்தைக்கூட செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 10 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், குறித்த இளைஞனை அவரது காதலி சில நாட்களாக தவிர்க்க ஆரம்பித்ததில் இருந்து இருவருக்கும் இடையில் சில மனக்கசப்புகள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இச்ம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles