NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறு தவறுகளால் போட்டியை நழுவவிட்ட இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள திரிபுரேஷ்வர் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (22) ஆரம்பமான மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி கண்டுள்ளது.

இலங்கை அணி தனது ஆரம்பப் போட்டியில் 3 நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

முதல் 2 செட்களில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்னிலையில் இருந்த இலங்கை அணி, சில தவறுகள் காரணமாக தோல்வி அடைந்தது.

முதல் செட்டின் ஆரம்பத்தில் 6 – 1 என முன்னிலையில் இருந்த இலங்கை, அடுத்த 5 புள்ளிகளை இழந்ததால் போட்டி 6 – 6 என சமமானது. எனினும், மீண்டும் திறமையாக விளையாடிய இலங்கை 14 – 9 என முன்னிலை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து 2 அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ள ஆட்டம் 25 – 25 என சமநிலை அடைந்தது. இதனை அடுத்து சமநிலை முறிப்பு முறையில் 27 – 25 என உஸ்பெகிஸ்தான் வெற்றிபெற்றது.

இரண்டாவது செட்டிலும் இலங்கை அணி இரு சந்தர்ப்பங்களில் முன்னிலை அடைந்த போதிலும், தவறுகள் இழைத்மையால் 20 – 25 என தோல்வியடைந்தது.

கடைசி செட்டில் உஸ்பெகிஸ்தானின் திறமைக்கும் வியூகங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத இலங்கை அணி 14 – 25 என தோல்வி அடைந்தது. இலங்கை தனது 2ஆவது போட்டியில் கஸக்ஸ்தானை இன்று (23) எதிர்கொள்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles