திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைகளில் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் சிறைக் கைதிகளை தொழில்முயற்சியில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்கு 4 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28 ஆயிரத்து 468 சிறைக் கைதிகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதில், 50.3 வீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் இருப்பதே சிறைச்சாலைகளில் தற்போது பாரிய சிக்கலாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சில சிறைச்சாலைகளில் அதன் சதவீதம் 65 வீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை சிறையில் அடைத்து வருவதாக சிலர் கூறினாலும், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய ஓவியக் கண்காட்சியொன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசெல்வதைத் தடுக்க, தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளுக்கு மேலதிகமாக மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் கூடுதல் பரிசோதனைக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.