யாழ்ப்பாணம் திருநெல்வேலி உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்ட நிலையில் குறித்த உணவகம் இன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய , சனிக்கிழமை குறித்த உணவகம், திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
![யாழில் சோற்றுப் பாசலில் மட்டைத் தேள்; உணவகத்திற்கு சீல் வைப்பு! | A Bat Scorpion In A Paddy Field Jaffna யாழில் சோற்றுப் பாசலில் மட்டைத் தேள்; உணவகத்திற்கு சீல் வைப்பு! | A Bat Scorpion In A Paddy Field Jaffna](https://cdn.ibcstack.com/article/b17f921d-3937-44fd-bec0-2f939c4fd7fb/24-6655cb60a7787.webp)
இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டதாக தெரியவருகின்றது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்தவாரமும் உணவகம் வழங்கிய உணவில் கறள் பிடித்த பம்பியொன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.