NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கி கப்பல் மாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பயணித்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.

இந்நிலையில், அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனேடிய கரையோர பொலிஸார் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கப்பலில் உள்ள ஒக்சிஜன் சுமார் 70 மணித்தியாலங்களுக்கே போதுமானதாக இருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட இச்சிறிய நீர்மூழ்கியில் 5 பேர் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைவரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமீஷ் ஹார்டிங்கும் இந்நீர்மூழ்கியில் பயணித்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் எனும் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்த நீர்மூழ்கி கனடாவின் சென் ஜோன்ஸ் நகரிலிருந்து கடந்த 16ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது,

நேற்றுமுன்தினம் (18) காலை சமுத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி இந்நீர்மூழ்கி இறங்கத் தொடங்கிய நிலையில், 2 மணித்தியாலங்களின் பின்னர் இந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மசாசூசெட்ஸ் மாநில கரையோரத்திலிருந்து சுமார் 900 மைல்கள் (1,450 கிலோமீற்றர் தூரத்தில்) தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டைட்டான் எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கி 4,000 மீற்றர் ஆழம்வரை செல்லக்ககூடியது என ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளை பார்வையிடுவதற்கான 8 நாள் பயணத்துக்கு 250,000 டொலர்கள் அறவிடப்படடுகிறது. டைட்டடானிக் கப்பல் சிதைவுகளை நோக்கி சுழியோடுவதற்கான வாய்ப்பும் இதன்போது வழங்கப்படுகிறது.

Share:

Related Articles