தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக, அரச ஊழியர்களுக்கு விஷேட விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாகக் கருதி, அரச பெண் ஊழியர் ஒருவருக்கு அதிகபட்சம் 04 மாதங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு, குறித்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷேட விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்கு, தத்தெடுக்கப்படும் குழந்தையினுடைய வயது 10 மாதங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பதுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் உண்மையான நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விஷேட சுற்றறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, குறித்த சுற்றறிக்கைக்கு ஏற்ப, நிரந்தர அரச ஊழியர் ஒருவர் அதிகபட்சம் 04 மாத ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என்ற வகையில் விடுமுறை எடுக்க முடியும்.
அதேபோல், நிரந்தர அரச பெண் ஊழியர் ஒருவர் குழந்தையை தத்தெடுக்கவென, 03 வேலை நாட்களுக்கான விஷேட மகப்பேறு விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையானது, இந்த ஆண்டு ஜூன் 26ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.