(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்குக் கூட காசநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர்; சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
காசநோயின் தற்போதைய நிலை தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நிபுணர் வைத்தியர
தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்கமளித்த அவர், இந்நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
காசநோய் கண்டறியப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டில் பதிவாகியுள்ள காசநோயாளிகளில் சுமார் 3 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும், இது மிகச் சிறிய எண்ணிக்கையே என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிவது மிகக்குறைவாக உள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு காசநோய்க்கான சிகிச்சை அளிக்காவிட்டால், மூளை காய்ச்சலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்ட சகல சிறுவர்களுக்கும் கிளினிக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 600 பேர் காச நோயினால் மரணமடைவதாகவும், ஒவ்வொரு 10 காசநோயாளிகளில் ஒருவர் இந்த துரதிஷ்டவசமான நிலையை எதிர்கொள்வதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஒனலி ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலேயே அதிக காசநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
2 வாரங்களுக்கு மேல் இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமலுடன் இரத்தப்போக்கு, அதிகப்படியான உடல் தேய்மானம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.