(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் தொடர்பான வழக்கு விசாரணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, தற்போது அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு, அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், வர்த்தகர் இறந்த இடத்திலும், அவரது வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை விசாரணைக்காக ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.