(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் நிலவும் வறட்சியினால் 13 மாவட்டங்களில் 174,000க்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 52,402 குடும்பங்களைச் சேர்ந்த 174,009 பேர் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 70,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையைப் பெறவில்லை. எல் நினோ விளைவு காரணமாக இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.