NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நாகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கையும், மத்துகம மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கலவான கிரியெல்ல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக 28 குடும்பங்களை சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தென், மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளிலும் மேற்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles