நீதிமன்றத்திற்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை பொலிஸ் நிலையம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியபோது பல்வேறு குற்றச் செயல்களுக்காக பல தடவைகள் இடமாற்றம் பெற்று சென்றவர் என்பதுடன் நேற்றைய தினம் அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவரது களவு சம்மந்தமான வழக்கு ஒன்றிற்காக பருத்தித்துறை நீதிமன்றில் சென்றபோது இவ்வாறு மது போதையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காலை 9:00 மணியளவில் நீதிமன்றுக்குள் சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்ற மதிய இடைவேளையின் பின் வெளியே சென்று மீள நீதிமன்றம் கூடிய போது மது அருந்தியதை மறைப்பதற்காக முகக்கவசம் அணிந்தும் , பபுல்கம் சப்பியவாறும் உள்ளே சென்று அமர்ந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திறப்பு நீதிமன்றிற்க்குள் வீழ்ந்துள்ளது. அதனை அவதானித்த நீதிபதி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றிற்க்கு வெளியே அனுப்புமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு கட்டளையிட்ட நிலையில் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் அவரிடம் சென்று வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் தன்னால் வெளியால் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளபோது அவர் மது போதையில் இருப்பதாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றார் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்.
இந்நிலையில் குறித்த மதுபோதையில் இருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.