NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்காக ரேடார் இயந்திரங்களை கொண்டுவர ஆயத்தம்!

இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

17 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 15ஆம் திகதி தற்காலிகமாக நிறைவடைந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர் முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையில் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரேடார் கருவிகளைப் பயன்படுத்தி புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்துள்ளது என்பதை தீர்மானிக்க உள்ளதாக நேற்று அகழ்வு பணிகள் நிறைவடைந்ததையடுத்து  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகழ்புப் பணிகளுக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிட்டார்.  

”புதைகுழி துப்புரவு செய்யப்பட்டு, போடப்பட்டிருந்த மண் மற்றும் பொலிதீன் அகற்றப்பட்டு, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த புதைகுழியானது ரேடார் கருவிகள் மூலம் இந்த புதைகுழி எவ்வளவு தூரத்திற்கு வியாபித்துள்ளது என்பதை கண்டறிவதற்கு ரேடார் கருவிகள் ஊடாக பரீட்சித்துப்பார்க்கப்படவுள்ளது. இது எதிர்வரும் 23, 24, 25 ஆகிய திகதிகளில் இடம்பெறும்  .”

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் அருகே தற்செயலாக எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக ஜூன் மாத இறுதியில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் வேறு உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய ரேடார் கருவியை பயன்படுத்துவது தொடர்பில் தொல்பொருள் தடயவியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில், புதைகுழிக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேலும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வு பணிகளை மேற்கொள்ள பணம் எஞ்சியிருப்பதாக  ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“தற்போது விடுவித்துள்ள நிதியை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை செய்ய முடியுமென தெரிவித்துள்ளனர். வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அடியிலும் கூட சிலவேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை வரும் நாட்களில் சரியாக பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய ஒரு செயற்பாடு என்ற அடிப்படையில் அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அரசாங்க அதிபருக்கு விடுவிக்கும் முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாகும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த நிதி விடுவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.”

செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சடலங்களை மீட்கும் விசாரணையில் முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் பதினேழு பேரின் எலும்புகள் மீட்கப்பட்டதோடு, விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles