NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பி குழுவில் முதலிடம் – அரையிறுதியில் நுழைந்தது இலங்கை ஏ அணி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவிற்கான அணிகள் நிலையில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை ஏ அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

கொழும்பு – ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று (18) நடைபெற்ற ஓமான் ஏ அணிக்கு எதிரான பகல் இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 217 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை இலங்கை உறுதிசெய்துகொண்டது.

இலங்கை ஏ அணியினர் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக இந்த வெற்றி இலகுவாக கிடைத்தது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைக் குவித்தது.

பசிந்து சூரியபண்டார (60), சஹான் ஆராச்சிகே (48),லசித் குரூஸ்புள்ளே (43), அவிஷ்க பெர்னாண்டோ (25), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (21 ஆ.இ.), சாமிக்க கருணாரட்ன (20) ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி இலங்கை ஏ அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். குறிப்பாக பசிந்து சூரியபண்டாரவும் சஹான் ஆராச்சிகேயும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 110 ஓட்டங்கள் இலங்கை ஏ அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

ஓமான் ஏ அணி பந்துவீச்சில் அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அயான் கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெய் ஓடேட்ரா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

260 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் ஏ அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் காஷியப் ப்ராஜாபதி (18), சுராஜ் குமார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு சமரக்கோன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 2 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles