(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பன்வில – மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விருந்தில் 13 பெண்கள் உட்பட 112 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது, போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவெல, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.