NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞரை கடத்த முற்பட்ட இருவர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து முச்சக்கர வண்டியில் 23 வயதுடைய இளைஞனை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் மற்றுமொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கொழும்பு புகையிரத நிலைய வளாகத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் வந்து பொலிஸ் அதிகாரிகள் என்றுக் கூறி, இளைஞனை நிறுத்தி, அந்த இளைஞன் போதைப்பொருள் வியாபாரி என்றும், அவரை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது வீதியில் அருகே கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தியதையடுத்து, முச்சக்கரவண்டியில் இருந்த இளைஞன், சந்தேகநபர் இருவரால் தான் கடத்தப்படுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இளைஞரை மீட்டு சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles