மட்டக்களப்பு, வாழைச்சேனை – புனாணை பகுதி விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அண்மையில் ஆங்கிலப் பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 25 வயதுடைய ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்ட ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியரான இவர், ரிதிதென்னையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்ஸில் மோதி சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மற்றையவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த இளம் ஆசிரியரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.