வடக்கு – கிழக்கு மாகாணங்களில் படுகொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரை நீதியை பெற்றுக் கொடுக்க பிரதமர் உறுதி வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லசந்தவின் குடும்பம் போன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் படுகொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை. ஆகையால், பிரதமர் இதனை உறுதிப்படுத்துவதுடன் செயல் வடிவத்தையும் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஊடகத்துறையில் பணியாற்றி சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு பல ஆதாரங்கள் வெளிவந்தன. அதனடிப்படையில் பெண் என்ற வகையில், பிரதமர் இசைப்பிரியாவுக்கும் நீதியை பெற்றுத்தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.