NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இயங்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ளதால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும்.
இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ நிலையால், நாடு முழுவதும் தற்போதைய காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles