NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைபாடு அல்லது விசேட தேவையுடையோர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகைதருவதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் எனவும், அவர் தேர்தலில் போட்டியிடாதவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த உதவியாளர் வேட்பாளர் ஒருவரின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ அல்லது பிரதேச முகவராகவோ அல்லது வாக்களிப்பு நிலையத்தின் முகவராகவோ செயற்படாத நபராக இருக்க வேண்டும்.

மேலும் உதவியாளர் எவ்வித உடல் பாதிப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பப்படிவங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் அல்லது www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

பார்வைக் குறைபாடு அல்லது விசேட தேவையுடைய நபர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்து அத்தாட்சிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரச வைத்திய அதிகாரியிடம் அச்சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னர் வாக்காளரின் உடற்தகுதி பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் பார்வைக் குறைபாடு அல்லது விசேட தேவையுடைய வாக்காளர்கள் உரிய உடற்தகுதி சான்றிதழை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles