NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேகமாக விரிவடையும் நரகத்தின் நூழைவாயில்..

நரகத்தின் நூழைவாயில் என்ற மிகப் பெரிய பள்ளம் ஒன்று சைபீரியாவில் இருக்கும் நிலையில், அது ஒவ்வொரு ஆண்டும் படுவேகமாக விரிவடைந்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் இருந்து வெளியாகும் கார்பன் அருகே இருக்கும் சுற்றுச்சூழல் மிக மோசமாகப் பாதிப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நரகத்தின் நுழைவாயில் யானா ஹைலேண்ட்ஸ் அமைந்துள்ளது. இது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாகும்.. ஸ்டிங்ரே மீன் வடிவத்தில் இருக்கும் இது தொடர்ந்து விரிவடைந்து வருகிறதாம்.

1960களில் இது மிகவும் சிறியதாகவே இருந்துள்ளது. அப்போது சாட்டிலைட்டில் படங்களில் கூட பார்க்க முடியாத சைஸில் தான் இருந்துள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இந்த துளை மூன்று மடங்கு விரிவடைந்துள்ளதாம்.. முழுக்க முழுக்க உறைந்து கிடக்கும் இந்த பள்ளம் உலகின் இரண்டாவது பழமையான பெர்மாஃப்ரோஸ்ட் (நிரந்தரமாக உறைந்து கிடக்கும் இடம்) என்று அறியப்படுகிறது.. 

இது முன்பு மிகவும் மெதுவாக விரிவடைந்து வந்த நிலையில், இப்போது அது வேகமாக விரிவடையத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றமே அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்போது சாட்டிலைட் படங்கள் மட்டுமின்றி விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவுக்கு இது விரிவடைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

இது தொடர்பாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் ரோஜர் மைக்கேலிடிஸ் கூறுகையில், “நிலத்தடியில் உள்ள பொருட்கள் உறைந்த கிடக்கும் போது இதுபோல நடக்கும். உலகின் வேறு சில இடங்களிலும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது. 

இந்த பள்ளம் காலப்போக்கில் எப்படி உருமாற்றம் அடைந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்க்டிக் பகுதியிலும் கூட இதே போன்ற நிகழ்வுகள் நடக்கலாம் என்பதையும் இது உணர்த்துவதாக இருக்கிறது. அவை இவ்வளவு பெரிதாக மாறாது என்றாலும் அடிப்படை இயற்பியல் ஒன்றுதான்” என்றார்.

முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் இது தொடர்பான ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் பள்ளம் சுமார் 1 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு விரிவடைவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அருகே படகே நதி இருக்கும் நிலையில், இந்த பள்ளத்தால் அதற்கும் ஆபத்து ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அடியே உறைந்து கிடக்கும் பொருட்கள் மெல்ல ஆவியாவதாலேயே இந்த நிகழ்வு நடக்கிறது. 

இது வேகமாக நடக்கும் போது பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போதே இதில் இருந்து 4,000 முதல் 5,000 டன்கள் வரையிலான கார்பன் வெளியாகும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இது மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும்​​​​பள்ளம் தொடர்ந்து விரிவடையும் நிலையில், இதனால் அருகே உள்ள கிராமங்களுக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளனர். பள்ளத்தில் இருந்து கசியும் கார்பன் அருகே உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் நிரந்தரமாக மாற்றுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கே நிலவி வந்த சூழலை மொத்தமாக மாற்றும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை வந்துள்ளது.

Share:

Related Articles