10 ஆண்டுகளுக்கு முன்னர் 227 பயணிகளுடன் காணாமல்போன மலேஷியன் விமானம் விழுந்து நொருங்கியிருக்கக்கூடிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட MH 370 மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்த நிலையில் காணாமல் போனது.
இதுவரை கிடைத்த செயற்கைகோள் தரவுகளின்படி, குறித்த விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், விமானம் எங்கு விழுந்திருக்கும் என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தென் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் BROKEN RIDGE எனப்படும் 20 ஆயிரம் அடி ஆழம் கொண்ட ஓஷியனிக் ப்ளாட்டோ (OCEANIC PLATEAU) எனப்படும் துளைக்குள் விமானம் விழுந்துள்ளது என்றும் அதனாலேயே எந்த ஒரு ரேடாராலும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் டாஸ்மேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.