ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருவதோடு தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகிறது.
இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் அரசு தீயிட்டு எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் தெரிவிக்கையில்,
“இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து, நூற்றுக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபான் அதிகாரிகள் எரித்துள்ளனர்.
இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.