சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுதேச வைத்தியத் துறைசார் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு இணையாக கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இதுவரை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யாமல், பாரம்பரியமாகவும் மற்றும் பரம்பரை அறிவு, அனுபவத்தின் அடிப்படையிலும் சுதேச வைத்திய சிகிச்சைகளை செய்துவரும் சுதேச வைத்தியர்களை, ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்வதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு தோற்றுவதில் நடைமுறை ரீதியிலான பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால், குறித்த பிரதேசங்களுக்குச் சென்று அவர்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்று, முறையான பரிசீலனைகளுக்குப் பின்னர் அவர்களைப் பரீட்சையின்றி பதிவு செய்யப்படும் என அவர் கூறினார்.
இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்மூலப் பரீட்சையுடன் பதிவுகளை முன்னெடுக்கத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்களுக்கு ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் முகவர்களாக இணையும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அதன் மூலம் இலங்கையின் ஆயுர்வேத உற்பத்திகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என்றும் இதன் ஊடாக ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆயுர்வேத சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் துறைசார் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு Nஏஞ 4 சான்றிதழுடன் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்கக் கூடியவர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.