அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை, ஒடுக்குமுறைக்குள்ளாகக் கூடிய நாடுகளுக்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளபட்சத்தில், அந்த நபரை வேறு நாட்டிற்கு நாடு கடத்த முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ரோகிங்யா மக்களை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது இலங்கை அரசாங்கம் பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் குறித்த ஆபத்தை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், உள்நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.