இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதமும், கொழும்பு மாவட்டத்தில் 75 சதவீதமும், கம்பஹா மாவட்டத்தில் 80 சதவீதமும் புத்தளம் மாவட்டத்தில் 78 சதவீதமும் மொனராகலை மாவட்டத்தில் 77 சதவீதமும் பதுளை மாவட்டத்தில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 76 சதவீதமும் வன்னி மாவட்டத்தில் அண்ணளவாக 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 74 சதவீதமும் கேகாலை மாவட்டத்தில் 72 சதவீதமும் குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 சதவீதமும், பதுளை மாவட்டத்தில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.