இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று (06) காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆபிரிக்கர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை 1 ஆம் திகதி கலீஜ் டைம்ஸ் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணையவழி குற்றங்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்களும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அந்த குழுவினர் நாடு திரும்பியதன் பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.