NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழித்தீவனம் விலை குறைக்கப்பட்டால் முட்டை விலை மேலும் குறைவடையும்..!

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது சந்தையில் முட்டை ஒன்று 28 முதல் 30 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கோழித்தீவனம் மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்படுமானால் முட்டையினை மேலும் குறைந்த விலையில் வழங்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழித்தீவனம் மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்படாத நிலையில், முட்டை உற்பத்தி தொழிற்துறை முற்றாக வீழ்ச்சியடையும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே, கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் மற்றும் மருந்துகளின் விலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கால்நடை வள அமைச்சில் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

கோழித் தீவனத்திற்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்தினை அரசாங்கத்தின் தலையீட்டுடன் குறைந்த விலையில் உற்பத்தியாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சோளத்திற்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளதாகக் கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ கருணாசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டை விலை தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் விவசாய அமைச்சில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles