NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈரானில் மூவருக்கு தூக்கு தண்டனை!

ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 

3 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

எனவே பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 ஆயிரம் பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து வெளிநாடுகளிலும் ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்தது. அதன்படி வெளிநாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களுக்கு முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவத்தை பயன்படுத்தக்கூடாது என ஐ.நா. சபை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் உலக நாடுகளும் ஈரானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.

அதன்பிறகு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி அந்த நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டார். போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அவ்வப்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில், போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த மேலும் 3 பேருக்கு நேற்று ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles