NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணொளிகளை பார்த்து தன்னை கடத்தியதாக கதை ஒன்றை உருவாக்கிய சிறுவனுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் போலி முறைப்பாட்டின் பேரில் 11 வயது பாடசாலை மாணவனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

குறித்த சிறுவன் நாரஹேன்பிட்டி பொலிஸில் போலி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறியதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாடசாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது, தன்னை வேனில் வந்த கும்பல் ஒன்று கடத்த முயன்றதாகவும், ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டதாகவும் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

எவ்வாறாயினும், விசாரணையின் போது, இலங்கையில் சிறுர்களை கடத்த முயல்வதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியைப் பார்த்து கதையை உருவாக்கியமை தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (23) கொழும்பு பார்க் வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேனில் வந்த குழுவொன்று தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பம்பலப்பிட்டியில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவன் தனது தந்தைக்கு அறிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டதாக மாணவன் மேலும் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, தந்தையும் மகனும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த நாரஹேன்பிட்டி பொலிஸார், குறித்த நாளில் அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை கண்காணித்ததன் பின்னர் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என கண்டறிந்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles