கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்
இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல எனவும் வாக்குகளை பெற்று கொழும்பில் இருப்பதும் தலைவர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனாலேயே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை எனவும் தற்போதைய அரசாங்கம் தரப்போவதும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள் எனவும் மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை எனவும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.







