முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்தமாதம் மகஜரினை ஒப்படைத்திருந்தனர்.
அதனையடுத்து இன்றையதினம் (04) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் புதுக்குடியிருப்பு தனியார் பேருந்து நிலைய வளாகத்தினுள் இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து கொண்ட நிலையில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு சார்பான குழுவினால் இன்றையதினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்திருந்தனர்.







