NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குதொடுவாய் – இதுவரை 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 19 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன.

எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles