மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார், ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான குமாரசாமி, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தலைவரான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சித் தலைவர்களை சந்தித்தோம். தேசிய அளவிலான முன்னேற்றத்தையும், பிராந்திய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த கூட்டணி பாடுபடும். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வோம் மற்றும் விரிந்த பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே இந்த பேச்சு வார்த்தையின் போது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் சார்பில் முக்கியமான துறைகளுக்கான அமைச்சர் பொறுப்பு தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மட்டுமில்லாமல் மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா (ஷிண்டே பிரிவு ), ஜனசேனா ஆகிய கட்சிகளும் தங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.