(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிணை வழக்கு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான்கானை அந்நாட்டின் துணை இராணுவம் கைது செய்திருந்தது.
இந்நிலையில், இம்ரான்கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பஞ்சாப் மாகாண பொலிஸார் இம்ரான்கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.
இதனிடையே ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்க கோரி லாகூர் உயர்நீதிமன்றில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் நேரில் முன்னிலையாகவில்லை என்பதால் பிணை மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க உத்தரவிட்டனர்.