NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்களின் காணியை கைப்பற்ற வந்த வனவள திணைக்கள அதிகாரிகளை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்..!

வனவள திணைக்களத்தினர் வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளப் பகுதியில் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த போது பொதுமக்கள் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் இன்று(11) இடம் பெற்றுள்ளது.

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர்.

குறித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத் திணைக்களத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள குறித்த கிராமத்துக்கு வருகை தந்திருந்தனர்.

பொதுமக்களுடைய வயல் நிலங்கள் மற்றும் தோட்டம் செய்கின்ற பகுதிகளையும் வனவளத்திற்கு உரியதாக அடையாளப்படுத்தி இருந்தமையினால் அவர்களை குறித்த பகுதியில் அளவீடு செய்ய விடாது பொதுமக்கள் அவர்களோடு முரண்பட்டுக் கொண்டனர்.

தமது கிராமத்துக்குரிய கிராம சேவையாளரை அழைத்து வருமாறும் அதன் பின்னரே அளவீட்டுப் பணியை மேற்கொள்ள அனுமதிப்போம் என்றும் தாம் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த வன வள திணைக்களத்தினர் தாம் செய்மதி ஊடாக பெறப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை சரி பார்ப்பதற்கு வந்திருப்பதாகவும் தமது பணியை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்தனர்..

எனினும், கிராம மக்கள் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனமாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை ஜனாதிபதி விடுவிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமது விவசாய நிலங்களையும் சேர்த்து வனவளத்துக்குரியதாக அடையாளப்படுத்துவதானது ஜனாதிபதியின் கருத்து பொய்யா அல்லது வன வள திணைக்களத்தின் கருத்து பொய்யானதா என்பதை உறுதிப்படுத்துமாறும் கேட்டதற்கு இணங்க வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதியில் இருந்து சென்றதோடு கிராம சேவையாளரையும் அழைத்து வருவதாக தெரிவித்திருந்தனர். அதனை அடுத்து அங்கு குழுமிய பொதுமக்களும் கலைந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles