(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மாங்குளம் – பச்சிளம்குளம் ஏ-9 வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் மோதுண்டதுடன் குறித்த பாரவூர்தி அதன் முன்னால் இருந்த மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் பாரவூர்திக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரும் வேனில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், வெல்லம்பிட்டி மற்றும் முல்லேரியா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் 3 பெண்கள் உட்பட 8 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.