(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யாழ்ப்பாணத்தில் சுமார் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும், அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினருக்கு பொலிஸார் இதுதொடர்பில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பில் போக்குவரத்து திணைக்களத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.
அதேவேளை, நேற்று முன்தினம் (17) யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும், இன்னுமொருவரும், போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுமார் 60க்கும் அதிகமானோருக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து பரீட்சையில் இரண்டு தரம் தோற்றியும் சித்தியடைய தவறியவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று அதிக பணத்தை பெற்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
குறித்த கும்பலுக்கும் மாவட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என தாம் சந்தேகிப்பதால், நீதிமன்ற அனுமதியினை பெற்று, மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கி வரும் கும்பலை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.