(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிரதான நகரங்களின் சுற்றுச்சூழலில் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உள்ளுர் அரச அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் சுற்றாடல் திணைக்கள நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள், வீதியோர கடைக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குப்பைகளை முறையாக அகற்றாதமையால் நகரங்கள் கடுமையாக மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக, குப்பைகளை அகற்றுவது மற்றும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.





