NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீதி விபத்துகளில் பாடசாலை மாணவர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

R.M Sajjath

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பாடசாலை மாணவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல – நோனாகம பிரதான வீதியில் 9 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கஹவத்த – யக்கஹஎல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.இதேவேளை, கடவத்தை வெளிச் சுற்றுவட்ட வீதியில் கணேமுல்ல சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி கடவையில் பயணித்த ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கந்தளாய் – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை லங்கா படுன வீதியின் முட்டிச்சேனை பிரதேசத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.மாவடிச்சேனையில் இருந்து லங்கா படுன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிய விட்டு விலகிக் கவிழ்ந்து அருகிலிருந்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு – ஒட்டி சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் – மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் தூணுக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles