NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்!

இஸ்ரேல் – காஸா இடையேயான மோதல் 12வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்.

காஸாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

காஸா விவகாரம் தொடா்பாக அவர் இஸ்ரேல், ஜோா்தான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக இந்தப் பயணம் குறித்து எக்ஸ் (ட்விட்டா்) ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு எனது ஆதரவைத் தெரியப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு புதன்கிழமை செல்கிறேன்.

தற்போது அந்தப் பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இது குறித்து விவாதிப்பதற்காகவும், பலஸ்தீனா்களின் சுய நிா்ணய உரிமைக்காக ஹமாஸ் அமைப்பினா் செயலாற்றவில்லை என்பதை உணா்த்துவதற்காகவும் ஜோா்தானுக்கும் செல்லவிருக்கிறேன் என்று தனது பதிவில் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளாா்.

ஜோ பைடன் செல்வதற்கு முன்னா் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு நாடுகளும், சேவை அமைப்புகளுக்கும் அளிக்கும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சோ்ப்பதற்கான திட்டமொன்றை உருவாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவும், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் இஸ்ரேல் மற்றும் ஜோா்தானுக்கு ஜோ பைடன் செல்வதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தங்கள் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவில் 12 நாட்களாக இஸ்ரேல் படையினா் குண்டுமழை பொழிந்து வருகின்றனா்.

மேலும்இ காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அதனை முழுமையாக முற்றுகையிட்டுள்ளனா்.

இதற்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த முற்றுகை நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும், அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

Share:

Related Articles