NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரர் !

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்சான் மதுசங்கவின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவரால் ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்சான் மதுசங்க இறுதியாக நடைபெற்ற LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த போதும், அவருடைய முழு திறமையையும் வெளிப்படுத்த தவறியிருந்தார். அதேநேரம் ஒருசில போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தை பொருத்தவரை முன்னணி வீரர்கள் உபாதைகள் காரணமாக தொடரை தவறவிட்டுள்ளனர். ஏற்கனவே முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க ஆகியோர் உபாதைகள் காரணமாக வெளியேறியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது டில்சான் மதுசங்க இடம்பிடித்துள்ளார்.

டில்சான் மதுசங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மற்றுமொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பினுர பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் LPL தொடரில் தம்புள்ள ஓரா அணிக்காக களமிறங்கி சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார். பினுர பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக வீரர்களாக நுவான் துஷார மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் வியாழக்கிழமை (31) இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles