NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை தமிழர்களுக்கு இந்திய பிரதமர் அரசியல் தீர்வொன்றை வழங்குவார் – பா.ஜ.க தலைர் அண்ணாமலை

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என இந்தியா – தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புpரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். 2009 மே மாதம் 10ஆம் திகதி குஜராத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்திய அரசாங்கம் என்ன செய்கின்றது என நரேந்திரமோடி பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.

2014இல் பா.ஜ.க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அணுகுமுறை மாற்றமடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் பலாலிக்கும் இடையிலான நேரடி விமானசேவை காரைக்கால் காங்கேசன்துறை இடையிலான படகு சேவை மற்றும் மன்னார் தமிழ்நாட்டிற்கு இடையிலான படகுசேவை திட்டம் போன்றவற்றினால் மக்கள் மத்தியிலான தொடர்பு அதிகரிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற மலையக மக்களை சந்தித்த முதல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆவார். 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

ஈழத்தமிழர்கள் மலையக்தமிழர்கள் பெருந்துன்பங்களை அனுபவித்துள்ளனர். இரு சமூகத்தினரையும் சர்வதேச சக்திகள் தங்கள் சதுரங்க விளையாட்டிற்காக பயன்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு இந்திய பிரதமர் அரசியல் தீர்வொன்றை வழங்குவார் என பா.ஜ.க தலைர் அண்ணாமலை மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles