NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு அனுமதி!

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக கலாநி.எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகமவின் நியமனத்துக்கும் அங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாந்து மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவராக எம்.ஜே.சூசைதாசன் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (10) நடைபெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.த சில்வா, கெஹலிய ரம்புக்வல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாந்து, அநுர பிரியதர்ஷன யாப்பா, தலதா அதுகோரல, உதய கம்மன்பில, (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles