NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

அத்துடன், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.

கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ் வீதி,ஜோகஸ் வீதி, லெயார்டிஸ் போட்வே வீதி, கிரான்ட்பாஸ் வீதி, பராக்கிரம வீதி மற்றும் கொஸ்கஸ் சந்தி ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்தில் நெரிசல் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவிசாவலை வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்கள் கிரான்ட்பாஸ் வீதியை பயன்படுத்தாமல் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், குறித்த வீதி பகுதிகளில் பொது போக்குவரத்து நடவடிக்கைளில் நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதனால் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை, நாவல வீதி, பாகொட வீதி, ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன்,
சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பிற்கல் 2 மணிக்கு கொட்டாவ பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு, மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், மாற்று வீதிகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

Share:

Related Articles