NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடா படுகொலை – கணவர் பகிர்ந்த கடைசி திகில் நிமிடங்கள்!

கனடா – ஒட்டாவாவில் அண்மையில் இலங்கையர்கள் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் உயிர்பிழைத்த குடும்பத் தலைவரான 34 வயதான தனுஷ்க விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி தான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மனைவி உள்ளிட்ட நான்கு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்கான போதிலும் அங்கிருந்த தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்ணிலும் ஒரு கையிலும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டைய வீட்டாரை உதவிக்கு அழைத்த விக்கிரமசிங்க

கொலைசெய்யப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவின் குடும்பம் கொல்லப்பட்ட இரவு பற்றிய புதிய விவரங்கள், ஒட்டாவாவில் உள்ள உள்ளூர் பௌத்த மடாலயத்தில் வசிக்கும் துறவியான பாண்டே சுனீதா வெளிப்படுத்தியுள்ளார்.

வியாழன் அன்று வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் விக்கிரமசிங்கவை சந்தித்த சுனீதா, என்ன நடந்தது என்பதில் தான் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 22:52 மணியளவில் (03:52 GMT) அவசர அழைப்புகளுக்குப் பதிலளித்த பின்னர், Barrhaven புறநகரில் உள்ள வீட்டில் இருந்து கொல்லப்பட்டவர்களின் சடலத்தை கண்டதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்ரமசிங்க, உதவிக்கு அழைக்குமாறு அண்டை வீட்டாரை நோக்கி கத்தியதை அடுத்து இந்த அவசர அழைப்புகள் வந்ததாக ஒட்டாவா பொலிஸ் சேவையின் தலைமை அதிகாரி எரிக் ஸ்டப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விக்ரமசிங்கவின் மனைவி (35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க) மற்றும் அவர்களது நான்கு சிறு பிள்ளைகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.

குடும்பத்துடன் வசித்து வந்த 40 வயதுடைய அமரகோன் முதியன்சேல காமினி அமரகோன் என்பவரின் சடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு கனடாவில் குடியேறியதாக ஒட்டாவாவில் உள்ள இலங்கை கனடா சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் நாரத கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவரான ஃபெப்ரியோ டி-சொய்சா, எந்தவித அசம்பாவிதமும் இன்றி வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஒட்டாவாவில் உள்ள Algonquin கல்லூரி வியாழன் அன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஃபெப்ரியோ டி-சொய்சா கல்லூரியில் சேர்ந்தார் என்பதையும், அவரது கடைசி செமஸ்டர் வருகை 2023 குளிர்காலம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து கனடா போன்று வெளிநாடுகளில் கல்விப் பயிறும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்” என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. “பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள்” என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

டி-சொய்சா வியாழன் அன்று ஒட்டாவா நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜரானார், இதன் போது அவருக்கு எதிராக ஆறு முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles